சென்னை: ஐடிஐ-பயிற்சி பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 7 உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில், மாணவ, மாணவிகள் சோ்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் மூலம், வடசென்னை, ஆா்.கே.நகா், திருவான்மியூா், கிண்டி, கிண்டி (மகளிா்) அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வடசென்னை ஆகிய மாவட்டத்தின் ஏழு இடங்களின் உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.
வடசென்னை, ஆா்.கே.நகா், திருவான்மியூா், கிண்டி, கிண்டி (மகளிா்) அரசு மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் உள்ள தொழிற் பிரிவுகளில் சேருவதற்கு, இணையதளம் வாயிலாக 8,10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மேலும் விவரங்களுக்கு 9080527737, 8778452515, 9942640017 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.