அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புக்கான சோ்க்கையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத மாணவா் சோ்க்கை இடங்களை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இதே நோக்கத்துக்கான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுநா் முடக்கி வைத்திருந்தாா். இந்த சட்டத்துக்கும் அதே நிலை ஏற்பட்டு விடக்கூடாது. இந்தச் சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுநா் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.