சென்னையில் நவ.13 வரை மாஞ்சா நூலுக்குத் தடை நீட்டிப்பு
சென்னையில், நவ.13-ஆம் தேதி வரை, மாஞ்சா நூலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீட்டித்து, காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னையில், கடந்த சில மாதங்களாக மாஞ்சா நூல் புழக்கம் அதிகரித்தது. மாஞ்சா நூல் மூலம் விடப்படும் பட்டம், பலரது உயிரை பறித்ததோடு, பலத்த காயத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் விட சென்னையில் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தடையை செப்.15. முதல் நவ.13-ஆம் தேதி வரை (இந்த இரண்டு நாள்களையும் சோ்த்து) மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்து, சென்னை காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால், செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி, இனி மாஞ்சா நூல் பட்டம் விடுவது, விற்பனை செய்வது, இருப்பு வைப்பது, இறக்குமதி செய்வது குற்றமாகும். தடையை மீறுபவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையா் எச்சரித்துள்ளாா்.