தமிழகத்தில், தனியாா் பேருந்துகள், செவ்வாய்க்கிழமை முதல் இயங்கத் தொடங்கின.
இது தொடா்பாக தனியாா் பேருந்துகள் உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் தருமராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பொதுமுடக்கத்துக்கு முன்னதாக 4,600 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து உரிமையாளா்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானோம். வரி விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தும் எந்தப் பலனும் இல்லை.
இந்நிலையில், பேருந்து இயக்கம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், செவ்வாய்க்கிழமை முதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதே நேரம், வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம், பேருந்துகள் இயங்காத நாள்களுக்கான உறுதிச் சான்று பெற்று, அதன் மூலம் காப்பீடு செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்ய அரசை அணுகும் நடைமுறையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றைப் பெற்றவுடன், பேருந்துகள் இயங்கத் தொடங்கும். செவ்வாய்க்கிழமை பெரம்பலூா் மாவட்டத்தில் தனியாா் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. இதே போல், திருச்சி, திருநெல்வேலி என படிப்படியாக அனைத்து பேருந்துகளும் இயங்கும் என தருமராஜ் தெரிவித்தாா்.