சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் சேர விழையும் மாணவர்களுக்கு இணையதள பதிவு முடிவடைந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு எண், ஆக.26-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாணவர்களை நேரில் அழைக்காமல், பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக, பதிவேற்றப்பட்ட சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாணவர்கள், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், செப்.25-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. www.tneaonline.org என்ற இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் கணக்கில் சென்று, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044 22351014, 044 22351015 என்ற ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.