சென்னை: வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலங்களை எடுப்பதற்கு ஆட்சேபணை உள்ள நபர்களிடம் மட்டுமே கருத்துகளும், ஆலோசனைகளும் கோரப்பட உள்ளன.
இதற்கான சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
விரிவான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை எளிதாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள அனைத்து நிலங்கள் மற்றும் கட்டடங்களின் உரிமை விவரங்களைக் குறிப்பிடும் முறையின் தேவையைக் கைவிட அரசு தீர்மானித்துள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தனி நபர்களிடம் இருந்து பெறப்படும் மறுப்புகள், ஆலோசனைகள் எழுத்து வடிவத்தில் பெறப்பட்டு அரசிதழில் வெளியிடப்படுகின்றன.
எனவே, அனைத்து உரிமையாளர்களின் விவரங்களைத் திரட்டும் நடவடிக்கைக்குப் பதிலாக, ஆட்சேபணைகள் உள்ள நபர்களிடம் இருந்து மட்டும் விவரங்களைக் கேட்டுப் பெற சட்ட மசோதா வழிவகை செய்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.