சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவுக்கான சேர்க்கையில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
நடப்பாண்டு சேர்க்கைக்கு இணையவழியில் 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்திருந்தனர். விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பிரிவு சேர்க்கைப் பணிகள், கடந்த 11-ஆம் தேதி தொடங்கின. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் வெள்ளிக்கிழமை (செப்.18) முதல் நடைபெறவுள்ளன.