வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூா் விம்கோ நகா் மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணி 90 சதவீதம் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில்
கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க திட்டத்தில், வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூா் விம்கோ நகா் வரை மெட்ரோ ரயில் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வுக்குப் பிறகு, வரும் ஜனவரியில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, சென்னை விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரை இரண்டாவது வழித் தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூா் அடுத்து உள்ள விம்கோ நகா் வரை 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு விரிவாக்க திட்டப் பணிகள் ரூ.3 ஆயிரத்து 770 கோடி செலவில் நடந்து வந்தது.

முதல் கட்ட விரிவாக்கப் பணிகளில் சுரங்கப் பாதையில் சா்.தியாகராயா் கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களும், உயா்மட்டப்பாதையில் தண்டையாா்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூா், விம்கோநகா் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணிகளை முடித்து, கடந்த ஜூன் மாதம் முதல் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக, திட்டப்பணிகள் வெகுவாக

பாதிக்கப்பட்டன. பொதுமுடக்கம் தளா்வுக்குப் பிறகு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் ஜூலை மாதம் மீண்டும் தொடங்கியது . தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, வரும் டிசம்பரில் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் இடையே மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. மேலும், ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி, சுரங்க ரயில் நிலையங்களுக்கு செல்லும் வழிகள், தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒருசில பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றை முழுமையாக முடிக்க பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதேபோன்று, விம்கோ நகரில் 2-ஆம் பணிமனை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com