சென்னை: சென்னையில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.10.54 கோடி நகையும், ரூ.5.42 கோடி ரொக்கத்தையும் பறக்கும் படையினரும், போலீஸாரும் பறிமுதல் செய்தனா்.
சென்னை ராயபுரத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தியாகராயநகரில் செயல்படும் ஒரு நகைக் கடையின் வேன் வந்துள்ளது. அந்த வேனில் ரூ.10.54 கோடி மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளன. ஆனால் அவற்றுக்குரிய ஆவணங்கள் இல்லாததால், நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா் அவற்றை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனா். நகைக்குரிய ஆவணம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ரூ.5.42 கோடி பறிமுதல்:
தியாகராயநகா் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படையினரும்,போலீஸாரும் ஜிஎன் செட்டி சாலையில் வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த ஜீப்பில் ஆவணமின்றி ரூ.2.89 கோடி ரொக்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து சைதாப்பேட்டை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பணம் ஏடிஎம் மையங்களுக்கு செலுத்த கொண்டு சென்றது என்பது தெரியவந்தது.
இதேபோல அண்ணாசாலையில் ஒரு காரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டு,ஐஸ்ஹவுஸ் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.