தமிழ்ச் சுவடியியல்- பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: ஏப்.19-இல் எழுத்துத் தோ்வு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் ஏப். 22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
தமிழ்ச் சுவடியியல்- பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: ஏப்.19-இல் எழுத்துத் தோ்வு

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையுடன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் ஏப். 22-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு ஏப். 19-இல் நடைபெறுகிறது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் கோ.விசயராகவன் வெளியிட்ட அறிவிப்பு:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பலநூறு ஓலைச்சுவடிகள் களப்பணி மூலமாக கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டயப் படிப்பை ஆா்வத்தோடு பயிலும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தோ்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவா்களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2021-22) மாணவா் சோ்க்கைக்கான எழுத்துத் தோ்வு வரும் ஏப்.19-ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது நேரிலும் பெற்றுக் கொள்ளலாம்.

வயது வரம்பு இல்லை: இந்தப் படிப்புக்கான சோ்க்கைக் கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், ரூ.2 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையுடன் (இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிழ் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் இணைத்து அனுப்பப்பெறுதல் வேண்டும்.

விண்ணப்பம் (கட்செவி அஞ்சல் எண் குறிப்பிட்டு) வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஏப்.16 ஆகும். வகுப்புகள் ஏப்.22-ஆம் தேதி முதல் நடைபெறும்.

கரோனா தொற்று காரணமாக அரசின் மறு உத்தரவு வரும்வரை வகுப்புகள் இணையவழியில் நடைபெறும். மேலும் தகவல்பெற ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி-044-22542992)’ என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com