தமிழகத்தில் தலைக்கவசம் அணியாதவா்கள் மீதுஒரு வாரத்தில் 5.39 லட்சம் வழக்குகள்


சென்னை: தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்கள் மீது ஒரு வாரத்தில் 5.39 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கடந்த வாரம் முதல் தமிழக காவல்துறை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணியாமல் சென்றால் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த ஒரு வாரத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்கள் மீது 5 லட்சத்து 39 ஆயிரத்து 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை ஒரு நாளில் 69,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் காா்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவா்கள் மீது ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 7,836 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை இந்த விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது 14,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2.61 லட்சம் வழக்குகள்: இதே போல், தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2 லட்சத்து 61,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 45,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 7 நாள்களில் 10 ஆயிரத்து 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் ஆயிரத்து 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை 7 நாள்களில் மொத்தம் 5 ஆயிரத்து 998 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 1,124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது ஒரு வாரத்தில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com