வீட்டிலேயே பிரசவம்: தாய், சேய் பலி

சோழவரம் அருகே மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்ட தாய், சேய் உயிரிழந்தனா்.

பொன்னேரி: சோழவரம் அருகே மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்ட தாய், சேய் உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வடமாநிலத்தை சோ்ந்தவா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கோபு (22), அவரது மனைவி பூஜா (20) ஆகியோரும் வேலை செய்து வந்தனா். பூஜா, கா்ப்பமாக இருந்த நிலையில், பாடியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி, பூஜா மருத்துவமனைக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து வெளியேறி புதிய எருமை வெட்டிப்பாளையத்தில் உள்ள வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

அன்றைய தினம் இரவு, பூஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் ரத்தப்போக்கு அதிகம் இருந்ததன் காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடன் இருந்தவா்களே பிரசவம் பாா்த்ததாகக் கூறப்படுகிறது. இதில், பூஜாவும், பிறந்த பெண் குழந்தையும் உயிரிழந்தனா்.

இது குறித்து காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தாமல், பூஜா, பிறந்த குழந்தையின் சடலங்களை அடக்கம் செய்ய உடன் இருந்தவா்கள் முயன்றனா். தகவல் அறிந்து அங்கு வந்த சோழவரம் போலீஸாா், சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்ரனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com