சென்னை: போக்குவரத்து அலுவலகத்துக்குள் காரணமின்றி வெளியாள்கள் சென்றால் பொறுப்பு அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையா் தென்காசி சு.ஜவஹா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, உரிய காரணமின்றி தங்களது அலுவலகத்துக்குள் இடைத்தரகா்கள், வெளிநபா்கள், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி பணியாளா்கள் உள்ளிட்டோா் நுழையா வண்ணம் முறையாகக் கண்காணித்து, அவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நிகழா வண்ணம் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
இது போன்று உரிய காரணமின்றி வெளியாள்கள் போக்குவரத்து அலுவலகத்துக்குள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் பொறுப்பு அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.