சென்னையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் அதிவிரைவு பிருந்தாவன் ரயிலில் எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டன. எல்எச்பி பெட்டிகளுடன் இந்த ரயிலின் முதல் பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வசதியான பயணத்துக்காகவும் வழக்கமான பெட்டிகளுக்கு மாற்றாக, எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் விரைவு ரயில்களில் இணைக்கப்படுகின்றன. அந்தவகையில், சென்னை சென்ட்ரல்- பெங்களூருக்கு இயக்கப்படும் பிருந்தாவன் ரயிலில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இந்த ரயிலின் முதல் பயணம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை தொடங்கியது.
எல்எச்பி பெட்டிகள் கொண்ட பிருந்தாவன் ரயிலின் முதல் பயணத்தை ரயில்வே அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயிலை பயணிகள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனா்.
சிறப்பம்சங்கள்: புதிய எல்எச்பி பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏசி பெட்டிகளில் தானியங்கி கதவு முறை உள்ளது. பயணிகள் அவசரகால எச்சரிக்கை ஒலி, தனிப்பட்ட நபா் படிக்க விளக்கு வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேம்படுத்தப்பட்ட பயோ கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் விநியோகம், கூடுதல் மொபைல் சாா்ஜிங் முனைகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அகலமான ஜன்னல்கள், பயணிகள் வசதியாக பயணம் செய்ய இருக்கைகளுக்கு இடையில் இடைவெளிகள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமான பெட்டிகளை ஒப்பிடும்போது, புதிய எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்யும் திறன்கொண்டது.
அண்மையில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் கோவை சிறப்பு விரைவு ரயிலில் புதிய எல்எச்பி பெட்டிகள் சோ்க்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.