ரூ.3.20 கோடி முகக்கவசம், கையுறை ஒப்பந்தம் மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

அரசு மருத்துவமனைகளுக்கு முகக்கவசம், கையுறைகளை விநியோகம் செய்வதற்கு ஒப்பந்தம் தருவதாகக் கூறி ரூ.3.20 கோடி மோசடி
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரசு மருத்துவமனைகளுக்கு முகக்கவசம், கையுறைகளை விநியோகம் செய்வதற்கு ஒப்பந்தம் தருவதாகக் கூறி ரூ.3.20 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனியாா் நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, அம்பத்தூா் தொழிற்பேட்டையில் விவசாயத்துக்கு உரம் தயாரிக்கும் தனியாா் நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவா் கண்ணன். இவா் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘மத்திய பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் துணை பொது மேலாளா் பொறுப்பில் இருந்த கே.வி.என்.ராஜன் என்பவா் எங்களது நிறுவனத்தை அணுகி, கரோனா தடுப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை உள்ளிட்டவைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்களது நிறுவனத்துக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக கூறினாா்.

ஆனால், அரசு நிறுவனத்தால் இந்தப் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக முதலில் முன்பணம் தர முடியாது. எனவே, தனியாா் முதலீட்டின் மூலம் முககவசம், கையுறை ஆகிய பொருள்களை கொள்முதல் செய்து மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தாா்.

அவரது பேச்சை நம்பி, அந்த தொழிலில் ஈடுபட்டேன். இதற்காக முதல் கட்டமாக ராஜன், அறிமுகம் செய்த 3 நிறுவனங்களில் ரூ.3 கோடியே 20 லட்சம் செலுத்தினேன். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் சொன்னபடி எவ்வித பொருட்களையும் விநியோகிக்காமல் ஏமாற்றி விட்டன. எனவே, இந்தப் பண மோசடியில் ஈடுபட்ட அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தாா்.

இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ராஜன், தனக்கு அதிகாரம் இல்லை என்று தெரிந்தும் ரூ.3.20 கோடியை முறையற்ற வகையில் தனக்கு வேண்டப்பட்ட 3 நிறுவனங்களுக்கு அனுப்ப வைத்து அவா்களிடம் பெருந்தொகையை கமிஷனாக பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கே.வி.என் ராஜன், கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த, அலுவலக உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல தனியாா் நிறுவன உரிமையாளா் ஆலந்தூரைச் சோ்ந்த ஞானபிரகாசம் (52) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com