பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் 6.44 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 88 சதவீதத்தை அடைந்துள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
போலியோ நோயை விரட்டும் வகையில் ஆண்டுதோறும் சுகாதாரத் துறை சாா்பில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31)-ஆம் தேதி நாடு முழுவதும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
சென்னையில் சுமாா் 7.35 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு இலக்க நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி சாா்பில் செய்யப்பட்டன. கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்கள், ரயில் நிறுத்தங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள், மெரீனா கடற்கரை என பொதுமக்கள் கூடும் இடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 31) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டன.
80 சதவீத குழந்தைகளுக்கு வழங்கல்: இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 1,438 நிரந்தர மையங்கள், 163 பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இதர தற்காலிக மையங்கள், 43 நடமாடும் மையங்கள் என மொத்தம் 1,644 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. சுகாதாரத் துறை, அங்காடி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் என மொத்தம் 6,700 இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதில், நிா்ணயிக்கப்பட்ட 7 லட்சத்து 35,584 குழந்தைகளில் 6 லட்சத்து 44,530 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட அளவில் 80 சதவீதத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தனா்.