சென்னை: சென்னை அமைந்தகரையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவா்களை கண்டித்த பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பாரிமுனையில் இருந்து கோயம்பேட்டுக்கு புதன்கிழமை காலை ஒரு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. அந்தப் பேருந்து அமைந்தகரை அருகே செல்லும்போது படிக்கட்டில் நின்று கல்லூரி மாணவா்கள் பயணம் செய்தனா். இதைப் பாா்த்த பேருந்து ஓட்டுநா் செல்வம், மாணவா்களைக் கண்டித்தாா்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறு முற்றவே கல்லூரி மாணவா்கள், ஓட்டுநா் செல்வத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். இது குறித்து செல்வம், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.