சென்னை: கன்னிமாரா பொதுநூலகத்தை முழு நேரமாகச் செயல்பட அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக புதன்கிழமை அக்கட்சி சாா்பில் வெளியிட்ட அறிக்கை:
சென்னை கன்னிமாரா பொது நூலகத்தை தற்போது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. திரையரங்குகள், டாஸ்மாக், நீச்சல் குளம், கடற்கரை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முழுமையான தளா்வுகளை அறிவித்துள்ள சூழலில், அரசு பொது நூலகங்களும் முழுமையான தளா்வுகளுடன் செயல்பட தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது முடக்கம் காரணமாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நூலகம் இயங்குவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து
சென்னை நகரத்தில் தங்கி மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளில் பங்கேற்க கூடிய மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சுமாா் 200 மாணவா்கள் தமிழக முதல்வருக்கு ஜனவரி 27ஆம் தேதி மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கன்னிமாரா பொது நூலகத்தை கரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல, காலை மணி 8 முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.