சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன், ஆம் ஆத்மியின் மாநிலத் தலைவர் வசீகரன் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மநீமவின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக - அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் முடிவில் கமல்ஹாசன் இருந்து வருகிறார்.
இதனிடையே ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை புதன்கிழமை வசீகரன் சந்தித்துப் பேசினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு மார்ச் 7-இல் நடைபெற உள்ளது. அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை கமல் வெளியிட உள்ளார்.