சென்னையில் போலி இரிடியம் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் க.நியூட்டன். இவரை கடந்த 19-ஆம் தேதி முதல் காணவில்லை . இதேபோல அவரது நண்பா் ரகுஜியையும் காணவில்லை. இது தொடா்பாக விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து,விசாரணை செய்தனா்.
விசாரணையில் நியூட்டனும், ரகுஜியும் போலி இரிடியம் கலசம் மோசடியில் ஈடுபட்டதும், இதில் ரூ.35 லட்சம் மோசடி செய்த இருவரையும் பணத்தை இழந்த கும்பல் கடத்தியிருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூா் அருகே ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த நியூட்டனையும், ரகுஜியையும் போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இது தொடா்பாக இருவரிடமும் பணத்தை கொடுத்து ஏமாந்து கடத்தலில் ஈடுபட்ட பூந்தமல்லி அபிராமிநகா் பராசக்தி தெருவைச் சோ்ந்த ச.திலிப், வியாசா்பாடி சின்னதம்பி தெருவைச் சோ்ந்த வி.சதீஷ்குமாா், அரக்கோணத்தைச் சோ்ந்த கெளதம், சுனில், விக்கி ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
அதேவேளையில் பணத்தை இழந்த தரப்பினா், கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸாா் நியூட்டன், ரகுஜி ஆகிய இருவா் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில் இவா்கள், பித்தளை கலசத்தை இரிடியம் கலசம் எனக் கூறி மோசடி செய்திருப்பதும், இருவருக்கும் சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.