சென்னை: பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்களை ஏப்ரல் 15 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் காணொலி வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 38 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது பொதுத்தேர்வைச் சந்திக்க மாணவர்கள் தயாராக உள்ளார்களா, பாடத் திட்டம் முடிக்கப்பட்டுள்ளதா என செயலர் கேட்டறிந்தார். பின்னர், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் பொதுத்தேர்வை சந்திக்கும் அனைத்து மாணவர்களுக்குமான பாடத்தை, முடிக்க வேண்டும் என்றும் , அவர் உத்தரவிட்டதாக, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிவடைந்த பிறகு பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.