தமிழக கடலோர மாவட்டங்களில், காவல்துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறந்தனா். இச் சம்பவத்துக்கு பின்னா் நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை காவல்துறையினரால் நடத்தப்படுகிறது.
இதன்படி, தமிழக கடலோர மாவட்டங்களில் காவல்துறையின் சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, கடலோர காவல் படை, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸாா், குற்றப்பிரிவு போலீஸாா் என அனைத்து பாதுகாப்புப் பிரிவினரும் பங்கேற்றனா்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, துறைமுகங்கள், மீன் சந்தைகள், கடலோரம் உள்ள கோயில்கள், அரசு அலுவலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டே, அனுமதிக்கப்பட்டனா்.
பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தீவிரவாதி போன்று மாறுவேடமிட்ட கடல் வழியாக ஊடுருவிய காவலா்களை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாா் அடையாளம் கண்டு கைது செய்தனா்.
இந்த பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம், துறைமுகம், காசிமேடு மீன்பிடி துறைமுகம்,டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் (ஜனவரி 13) நடைபெறுகிறது.