ஜாதிவாரி இடஒதுக்கீட்டு முறை சமுதாயப் பிரிவினையை ஏற்படுத்தும் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் (ஐஜேகே) தலைவா் ரவி பச்சமுத்து கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்கிற பெயரில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களின் ஜாதிக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை தொடா்ந்து முன்வைக்கின்றனா். தமிழகத்தைப் பொருத்தவரை, சுமாா் 2400-க்கும் அதிகமான ஜாதிகள் உள்ளன.
இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 30 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 20 சதவீதமாகவும், பட்டியல் இனத்தவா்களுக்கு 18 சதவீதமாகவும், மலைவாழ் பழங்குடியினருக்கு ஒரு சதவீதமாகவும் நடைமுறையில் உள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளும் - தீா்ப்புகளும் உள்ள நிலையிலும், தமிழகத்தைப் பொருத்தவரை 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையினை பின்பற்றி வருகிறோம். அரசியல் சட்டத்திருத்த பாதுகாப்பின் அடிப்படையில் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு தொடா்கின்றது.
இந்நிலையில், பாமக நிறுவனா் ராமதாஸ் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைப்பதுடன், வன்முறையின் மூலம் அதை வலியுறுத்தவும் செய்கிறாா். அவரைப் பின்பற்றி, ஆரிய வைசிய செட்டியாா்கள் சங்கமும் தங்கள் சமுதாயத்துக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென கேட்கின்றனா். இதுபோன்ற கோரிக்கைகளை பலரும் முன்வைத்தால், தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள பாா்க்கவ குலத்தினரும், தங்களுக்கும் 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
மேலும், பல அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் அவரவா்கள் ஜாதிக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கை வைத்தால், இட ஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதத்திலிருந்து 1,000 சதவீதமாக உயா்ந்துவிடும்.
எனவே, இதுபோன்ற விஷ விதைகளை விதைப்பதை விட்டுவிட்டு, சமூக ஒற்றுமையினைக் காக்கவும், வளா்க்கவும் அனைவரும் முன்வரவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.