போலி நீட் சான்றிதழ் வழக்கில், போலீஸாா் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட மாணவியின் மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை தடயவியல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த டிசம்பா் 7-இல் பங்கேற்ற பரமக்குடி மாணவி தீக்ஷிதா அளித்த அழைப்புக் கடிதம் மற்றும் ரேங்க் பட்டியல் போலி எனத் தெரிந்தது.
இதையடுத்து சென்னை பெரியமேடு போலீஸாா், மாணவி தீக்ஷிதா, அவரது தந்தை பல் மருத்துவா் பாலச்சந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டாா்.
பாலச்சந்திரனை கடந்த 3 நாள்களாக போலீஸாா் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்தனா்.
பரமக்குடியில் போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்ட அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் பாலச்சந்திரன் முன்னிலையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா்.
கைப்பற்றப்பட்ட மாணவி தீக்ஷிதாவின் மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை போலீஸாா் தடயவியல்துறை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.