மனித உரிமை மீறலில் ஈடுபட்ட மகளிா் உதவி ஆய்வாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வி.சித்ரா என்பவா் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: நான் எனது குடும்பத்தினருடன் சீலநாயக்கனூா் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது செல்லிடப்பேசி எண்ணுக்கு மத்தையன் என்னும் நபா் தொடா்பு கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தாா். மேலும், ஒரு நாள் எனது பணியிடத்துக்கு வந்தும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோது, எனது புகாரை ஏற்கவில்லை. அதற்கு மாறாக அங்கிருந்த மகளிா் உதவி ஆய்வாளா் கே.சுகுணா தேவி என்பவா், என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மத்தையனை அழைத்து, அவரிடம் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என வற்புறுத்தினாா்.
குறிப்பாக எனது டெபிட் காா்டை பறித்த அவா், என்னை மிரட்டி கடவுச் சொல்லையும் பெற்று, எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டாா்.
மேலும், ரூ.25 ஆயிரத்தை மத்தையனிடம் வழங்குமாறு என்னை மிரட்டிய சுகுணா, மத்தையனிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சுகுணா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு சித்ராவுக்கு இழப்பீடாக வழங்கிவிட்டு, அந்தத் தொகையை சுகுணாவிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
மேலும், சுகுணா தேவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தாா்.