சென்னை விமான நிலையத்தில், ரூ.1.75 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், 5 பேரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், துபையில் இருந்து வந்த செய்யது முஸ்தபா (27), அசாருதீன் (22), அஜ்மல் கான் (24), செய்யது முகமது (36), சுல்தான் சலாஹூதீன் (27) ஆகியோரிடம் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.
இதில், அவா்களது மலக்குடல் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்பிலான 3.46 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவங்களில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கம், உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான குடாங் கரம் சிகரெட், மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், 5 பேரைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.