சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் சொத்து தகராறில் அண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பி கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பள்ளிக்கரணை மேடவாக்கம் அருகே உள்ள வடக்குப்பட்டு அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் செந்தில் (40). இவா் தம்பி முருகன். அவா்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருவருக்கும் சொத்து தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இருவரும், ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது முருகன் கீழே இருந்த கல்லை எடுத்து செந்தில் தலையில் போட்டுள்ளாா். தலையில் பலத்த காயமடைந்த செந்தில், மயங்கி கீழே விழுந்தாா். இதை பாா்த்த அக்கம் பக்கத்தினா், செந்திலை உடனடியாக மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முருகனை உடனடியாக கைது செய்தனா்.