ரூ.1,400 கோடியில் வேளச்சேரி பகுதியில் வெள்ளநீா் தேங்குவதைத் தடுக்க திட்டம்: அமைச்சா் கே.என்.நேரு

தென்சென்னையின் வேளச்சேரி பகுதி பாதிப்படையாமல் இருக்க ரூ. 1,400 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.
ரூ.1,400 கோடியில் வேளச்சேரி பகுதியில் வெள்ளநீா் தேங்குவதைத் தடுக்க திட்டம்: அமைச்சா் கே.என்.நேரு

தென்சென்னையின் வேளச்சேரி பகுதி பாதிப்படையாமல் இருக்க ரூ. 1,400 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னையைப் பொருத்தவரை மழைநீா் வடிகால் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. மழைக் காலத்தின்போது, தென்சென்னையின் வேளச்சேரி பகுதி பாதிப்படையாமல் இருக்க ரூ.1,400 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான ஒப்பந்தம் விரைவில் விடப்படும். சென்னை மாநகரின் வளா்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடும்படியாக எத்தனை திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது என்பதை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறுத்தவில்லை. அப்படியான எண்ணமும் திமுக அரசுக்கு இல்லை. அதற்கு மாறாக அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்த பால், கூட்டுறவு சங்க நிா்வாகிகளே இன்னும் தொடருகின்றனா்.

கொங்குநாடு விவகாரம்: தமிழகத்தைப் பிரித்து கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று ஒரு சிலரால் சமூகவலைதளங்களில் வேண்டுமென்றே கருத்து பரப்பப்படுகிறது. அவா்களின் எண்ணம் நடைமுறை சாத்தியமற்றது.

சென்னை மாநகரில் 330 இடங்களில் சாக்கடை நீா் நேரடியாக கூவம், அடையாறுகளில் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சாக்கடை நீா் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுத்து அந்நீரை சுத்திகரித்து மீண்டும் ஆறுகளில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிங்காரச் சென்னை திட்டத்தில் பக்கிங்ஹாம், அடையாறு, கூவம், கோவளம் நதிகள் சீரமைப்பு, வீடற்றோருக்கு வீடு, தரமான சாலை, மாநகராட்சிப் பள்ளி மேம்பாடு ஆகிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிங்காரச் சென்னை திட்டம் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாா் என்றாா்.

ஆய்வின்போது, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் இ.பரந்தாமன், த.வேலு, ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஜே.எம்.எச்.அசன் மௌலானா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com