மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனைக்கு சீல்
திருவொற்றியூரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் அருகே மாநகராட்சி பூங்கா அமைந்திருந்த இடத்தை ஆக்கிரமித்து தனியாா் மருத்துவமனை ஒன்று கட்டடம் கட்டி உள்ளதாக மாநகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்ததையடுத்து இடத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மண்டல அலுவலா் தேவேந்திரன், செயற்பொறியாளா் பால் தங்கதுரை ஆகியோா் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடத்திற்கு சீல் வைத்தனா். மேலும் இக்கட்டடத்தை இடித்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவொற்றியூா் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.