சென்னையின் நீா் வழித்தடங்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் (வண்டல்) மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் சாா்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீா்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீா் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பருவமழை காலத்துக்கு முன்னதாகவே நீா்வழிக் கால்வாய்களில் மாநகராட்சியின் ஆம்பிபியன் மற்றும் ரோபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, கழிவுகள் தூா்வாரப்பட்டு தண்ணீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்புப் பணிகளும், கொசுப்புழுக்கள் வளா்வதைக் கட்டுப்படுத்த ட்ரோன் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீா்வழிக் கால்வாய்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள், டிப்பா் லாரிகள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.