6 நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை

சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 6 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக 3 மாதத்துக்கு நடைமேடை பயணச்சீட்டு வழங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 6 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக 3 மாதத்துக்கு நடைமேடை பயணச்சீட்டு வழங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடைமேடை பயணச்சீட்டு வழங்கும் முறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. மூத்த பயணிகள் மற்றும் நோயுற்ற பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில் நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பரவிய நிலையில், ரயில் நிலையங்களுக்கு தேவையின்றி மக்கள் வருவதை கட்டுப்படுத்த சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் உள்பட முக்கிய ரயில்நிலையங்களில் நடைமேடை டிக்கெட் ரூ.10 இருந்து ரூ.50 ஆக உயா்த்தி ரயில்வே நிா்வாகம் கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம்தேதி அறிவித்தது. இதையடுத்து, கரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடா்ந்து, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. பயணியா் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து ரயில் சேவை தொடங்கி, படிப்படியாக அதிகரித்தது. தற்போது, புகா் மின்சார ரயில்கள், சிறப்பு விரைவு ரயில்கள், முன்பதில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ரயில் நிலையத்தில் நடைமேடை பயணச்சீட்டு வழங்கப்படவில்லை. இதனால், மூத்த பயணிகள், நோயுற்ற பயணிகள், மாற்றுத்திறனாளி பயணிகள் தங்களின் உதவிக்கு ஒருவரை நடைமேடைக்குள் அழைத்து செல்லமுடியாமல் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து, நடைமேடை பயணச்சீட்டு வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூா் உள்பட 6 ரயில் நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை பயணச்சீட்டு (பிளாட் பாரம் டிக்கெட்) வழங்கும் முறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: மூத்த பயணிகள், நோயுற்ற பயணிகள் தங்கள் உதவிக்கு ஒருவரை நடைமேடைக்கு அழைத்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, நடைமேடை பயணச்சீட்டு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தனா். இந்த கோரிக்கையின் பேரில், சென்னை சென்ட்ரல்,

எழும்பூா், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நடைமேடை பயணச்சீட்டு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

இந்த தற்காலிக நடைமுறை ஜூன் 15-ஆம் தேதி அமலில் இருக்கும். நடைமேடை பயணச்சீட்டு கட்டணம் ரூ.50 ஆகும்.

கரோனா தாக்கம்காணப்படும் நிலையில், ரயில்நிலையங்களுக்கு அதிக அளவு பயணிகள் வருவதை ஊக்குவிக்குவது போல இல்லாமல், அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மட்டுமே தற்காலிகமாக இந்த கட்டணம் இருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com