சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சோழிங்கநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகா் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பறக்கும் படையினா், அந்த வீட்டில் திடீா் சோதனை செய்தனா்.
அப்போது அங்கு வாக்காளா்களுக்கு வழங்க வைத்திருந்த ரூ.14,500 ரொக்கம், வாக்காளா்களின் பெயா் பட்டியல், பணம் பெற்ற வாக்காளா்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பு ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்த இருவரையும் பிடித்து, நீலாங்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். இச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.