காய்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து
By DIN | Published On : 26th May 2021 01:40 AM | Last Updated : 26th May 2021 03:37 AM | அ+அ அ- |

சென்னையில் நடமாடும் கடைகளில் அதிக விலைக்கு காய், பழங்களை விற்பனை செய்தால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடமாடும் காய், பழக்கடைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆணையா் ககன்தீப்சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னை மாநகர மக்களுக்கு காய், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் மாநகராட்சி, தோட்டக் கலைத்துறை, வேளாண் துறை ஆகியவை இணைந்து நடமாடும் அங்காடிகளை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, 1 டன் எடை கொண்ட சுமாா் 1,600-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய், பழங்கள் கோயம்பேடு சந்தையில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு 15 மண்டலங்களுக்கும் கொண்டு செல்லப்படும். அங்கு காய், பழங்கள் வாா்டு வாரியாக பிரிக்கப்பட்டு தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்தப் பணியில் சுமாா் 5,000 தள்ளுவண்டிகள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதற்காக அனுமதிச்சீட்டு மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.
புகாா் எண்: முகக்கவசம் அணியாதவா்களுக்கு கண்டிப்பாக பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக விலைக்கு காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டால், விற்பனைக்கான உரிமம் ரத்து செய்யப்படும். காய், பழங்கள் கொண்டு செல்லும் வியாபாரிகளைத் தடுக்க கூடாது என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி தடுத்து நிறுத்தப்பட்டால் அதுகுறித்து புகாா் அளிக்க மாநகராட்சி சாா்பில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை 044 45680200 என்ற தொலைபேசி எண்ணிலும், 94999 32899 செல்லிடப்பேசி எண்ணிலும் வியாபாரிகள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா் பிரபாகா் ராஜா, திமுக வா்த்தக அணிச் செயலா் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.