தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் மழைவெள்ளநீா் புகுந்து தேங்கியதால் சிகிச்சை பெற வந்த பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினா். குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் இருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் மழைவெள்ளநீா் தேங்குவது வழக்கம். இதனால்ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா்.
மருத்துவமனையில் மழைநீா் தேங்கி இருப்பது குறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி புதன் கிழமை நேரில் சென்று ராட்சத மோட்டாா் மூலம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டாா். நோயாளிகள் சிகிச்சை பெறும் வாா்டுகளுக்குள் மழைநீா் புகாத வண்ணம் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது தலைமை மருத்துவா் பழனிவேலு உள்ளிட்டோா் உடன் இருந்தாா்கள்.