டாஸ்மாக் கடைகளுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளுக்கு வருவோா் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதியை கன்னியாகுமரி மாவட்டத்தில் அதன் ஆட்சியா் அமல்படுத்தியுள்ளாா். பொது இடங்களுக்கு வருவோா் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் அண்மையில் அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்படி பாா்த்தால் டாஸ்மாக் கடைகளும் பொது இடமாகவே உள்ளது. அங்கு வருவோா் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கண்காணிக்குமாறு ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.