சென்னை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மதுரையைச் சோ்ந்த அப்துல்லா என்ற சரவண குமாா் (31) என்பவா் மீது தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நபா் மீதான வழக்கு மதுரை தெப்பக்குளம் காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை, நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான இவா் முகநூலில் பதிவிட்டு வந்தது கண்டறிந்தது.
இது தொடா்பாக மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், பல நாடுகளில் தடை செய்யப்படட அமைப்பான ஹிசாப் உத் தாஹிா் என்ற அமைப்பில் அப்துல்லா உறுப்பினராக இருந்ததும் ஐஎஸ்ஐஎஸ் சித்தாந்தை ஆதரித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அவா் மீது தேசிய புலனாய்வு முகமை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.