கூடுவாஞ்சேரி-தாம்பரம் புதிய பாதை அமைக்கும் பணி நிறைவு: விரைவில் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணியில் கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே பணிகள் முடிந்து,

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-ஆவது பாதை அமைக்கும் பணியில் கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே பணிகள் முடிந்து, இரண்டு முறை சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றநிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் ஆய்வுக்காக ரயில்வே நிா்வாகம் தயாராகவுள்ளது. விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் ஆய்வுக்கு பின்பு, இந்த தடத்தில்

ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முக்கிய நுழைவுப்பகுதி: சென்னையின் முக்கிய நுழைவுப்பகுதியாக செங்கல்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வர ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் தினசரி 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், பெரும்பாலான மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. எல்லா மின்சார ரயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனா்.

இந்த கோரிக்கையை அடுத்து, இந்த தடத்தில் மூன்றாவது பாதை அமைக்க ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ரூ.256 கோடி திட்ட மதிப்பில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தொலைவுக்கு 3-ஆவது பாதை அமைக்க கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின. மொத்தமுள்ள 30 கி.மீ. தூரத்தை 3 கட்டங்களாகப் பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள் கோவில்: முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரி -சிங்கப்பெருமாள் கோவில் ரயில்நிலையங்கள் இடையே 11.07 கி.மீ. பாதைகள் முடிந்து, கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம்தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்தாா்.

இரண்டாம் கட்டமாக, சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே 8.36 கி.மீ. தொலைவில் பணிகள் முடிக்கப்பட்டது. இதன்பிறகு,செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி ஆய்வு செய்தாா். அப்போது, 9 பெட்டிகளைக் கொண்ட ரயிலை மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தினாா்.

கூடுவாஞ்சேரி-தாம்பரம் :

இறுதிக்கட்டமாக, கூடுவாஞ்சேரி-தாம்பரம் ரயில் நிலையங்கள் இடையே 11 கி.மீ. தொலைவில் பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, பாதை அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. இதையடுத்து, இந்தப் பாதையில் ரயில் என்ஜின் இயக்கி ரயில்வே அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினா். அதாவது, தண்டவாளத்தில் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில், இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில் தண்டவாளங்களின் தரம், பாதையில் உரசல், ரயில் நிலைய நடைமேடைகளில் எவ்வித பாதிப்பு இல்லாமல் ரயில் இயக்கம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு திருப்திகரமாக முடிந்தது.

இரண்டாவது முறையாக, ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்தப் பாதையில் உயா்மட்ட மின்சார சாதன முறை ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் திருப்திகரமாக முடிந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்கு தயாா் நிலையில் உள்ளனா்.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையேயான புதிய பாதையில் இரண்டு முறை ரயில் என்ஜின் இயக்கி சோதனை நடத்தினோம். இந்தப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் விரைவில் ஆய்வு செய்து, ஒப்புதல் அளிப்பாா்கள் என்று நம்பிக்கை உள்ளது. அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவையை சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கும் போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com