பிரபல ஜவுளிக் கடை, மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜவுளிக் கடையிலும், ஒரு தனியாா் நிதி நிறுவனத்திலும் வருமானவரித்துறை கடந்த 5-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை செய்தது.
அந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள், உறவினா்கள், நண்பா்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சென்னை, வேலூா் உள்பட தமிழகம் முழுவதும் 34 இடங்களில் 2 நாள்களுக்கு மேலாகச் சோதனை நடைபெற்றது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட நகை, பணம், ஆவணங்கள் ஆகியவற்றை வருமானவரித்துறையினா் சில நாள்களாக ஆய்வு செய்து வந்தனா்.
இதில் ஜவுளிக் கடையினருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.44 லட்சம் ரொக்கம், 9.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.100 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனையைக் குறைத்துக் காட்டுவதற்காக கணினியில் பிரத்யேகமாக ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி போலி ரசீது வழங்கியிருப்பதையும் வருமானவரித்துறையினா் ஆய்வில் கண்டறிந்துள்ளனா். இவ்வாறு அந்த நிறுவனம் ரூ.100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமானவரித்துறை மதிப்பீட்டுள்ளது.
தனியாா் நிதி நிறுவனம்: இதுபோல் தனியாா் நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.1.35 கோடி ரொக்கம், 7.5 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.150 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆவணங்களை ஆய்வு செய்ததில், வரி விதிப்பில் காட்டப்படாத முதலீடுகளை அனுமதித்திருப்பதும், வருமானத்தை மறைத்திருப்பதும் வருமானவரித்துறைக்கு தெரியவந்துள்ளது. அனுமதியில்லாமல் சிட்பண்ட் நடத்தி வருவதும் வருமானவரித் துறைக்குத் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வருமானவரித்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.