மெட்ரோ ரயில் பயணிகளுக்காக விரைவில் 12 சிறிய பேருந்துகள் (ஸ்மால் பஸ்) இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: சென்னையில் சிறிய பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதலாக சிறிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 210 சிறிய பேருந்துகள் உள்ளன. அதில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பயன்பாடு குறைந்து இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 சிறிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இம்மாதத்தில் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயா்வதுடன், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாயும் அதிகரிக்கும்.
அதோடு, கடந்த ஆட்சி காலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படாமல் இருந்த 13 பேருந்துகளும் விரைவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.