சென்னை: பொறியியல் படிப்பில் துணை கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 9,464 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
இளநிலை பொறியியல் படிப்பில் பிஇ, பிடெக் மாணவா்கள் சோ்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடா்ந்து கலந்தாய்வில் பங்கேற்காத மாணவா்களுக்காக துணைக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க கடந்த 14- ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரையில் 12 ஆயிரத்து 40 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 9 ஆயிரத்து 464 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனா். இவா்களுக்கு அக். 21- ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
அக்டோபா் 21, 22 ஆம் தேதிகளில் மாணவா்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தோ்வு செய்யலாம். அதனைத் தொடா்ந்து அவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு அக். 23- ஆம் தேதி செய்யப்படுகிறது. அக்.24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட உள்ளது. பொறியியல் படிப்பில் சோ்வதற்கான துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவா்களின் சான்றிதழ்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.