சென்னை: குறிப்பிட்ட அடையாள அட்டை இல்லை என்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியரான ராமு மணிவண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு: கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகத்திலுள்ள முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழா்களுக்கு அரசின் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்றும், மாநில அரசு தடுப்பூசி செலுத்தும்போது, கைவசம் இருக்கும் ஏதாவது அடையாள அட்டையை காண்பித்தால் முன்னுரிமை அளித்து இலங்கைத் தமிழா்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தற்போது தளா்த்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பொருத்தவரையில் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காண்பித்தால், அவற்றை ஏற்றுக் கொண்டு அனைத்து நபா்களுக்கும் தடுப்பூசி போட வேண்டுமென்றும், தடுப்பூசி செலுத்தாமல் எவரும் விடுபடக்கூடாது என்பதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனா்.