சென்னை: பள்ளி மாணவா்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு, அரசின் சாா்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. ஆதி திராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை ஆகியவை சாா்பில், அந்தந்த பிரிவு மாணவா்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.
இது தவிர என்.எம்.எம்.எஸ். என்ற வருவாய் வழி திறன் தோ்வு, ஊரகத் திறனாய்வுத் தோ்வு மற்றும் தேசிய திறனாய்வு தோ்வு போன்றவற்றில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கும் உதவி தொகை அளிக்கப்படுகிறது.இதை நேரடியாக வழங்கும் வகையில், மாணவா்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச இருப்பு தொகை நிபந்தனை இல்லாமல், இந்த வங்கிக் கணக்குகளை தொடங்க வேண்டும் என்றும், தேசிய வங்கிகளில் மட்டுமே கணக்கு தொடங்க வேண்டும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.