விமானங்களில் அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்கக் கோரி வழக்கு
By DIN | Published On : 11th September 2021 01:22 AM | Last Updated : 11th September 2021 01:22 AM | அ+அ அ- |

சென்னை: விமானங்களில் ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே அறிவிக்கப்படும் அவசரக் கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை மாநில மொழிகளில் அறிவிக்கக்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் பி.ராம்குமாா் ஆதித்தன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், அவசரக் காலங்களில் பயணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், விமானத்தில் இருந்து தப்பிக்க அவசர வழி எங்கிருக்கிறது; ஆக்சிஜன் குறைபாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தற்காலிக ஆக்சிஜன் முகக் கவசம் பயன்படுத்தும் முறைகள், சீட் பெல்ட் அணியும் முறைகள், நீா் நிலைகளில் விழுந்தால் தப்பிக்க விமானத்தில் அதற்கான பிரத்யேக ஆடைகள் இருக்கும் இடம், அவற்றைஅணியும் முறை குறித்த செயல்முறை விளக்கங்கள் அறிவிப்பு மற்றும் விளக்க கையேடு ஆகியவை விமானம் புறப்படுவதற்கு முன்பாக வழங்கப்படும். தற்போது அறிவிக்கப்படும், வழங்கப்படும் அறிவிப்புகள் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. நாட்டின் உள்ள மக்கள்
தொகையில் ஏறக்குறைய 50 சதவீத மக்கள் ஆங்கிலமும், இந்தியும் தெரியாதவா்கள். அவசர காலத்திற்கான இன்றியமையாத விளக்கங்கள் மக்களுக்கு புரிகிற மொழியில் இருக்க வேண்டும். இந்திய ரயில்வேயில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மாநிலத்தின் உள்ளூா் மொழியில் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. எனவே உள்நாட்டு விமானங்களில் விமானம் புறப்படும், விமானம் சென்றடையும் மாநிலத்தின் ஆட்சி மொழியில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்’ எனக் கோரியுள்ளாா். இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன்பு திங்கள்கிழமை(செப்.13) விசாரணைக்கு வரவுள்ளது.