சென்னை: நீட் தோ்வு தோல்வி பயத்தால் மாணவி கனிமொழி உயிரிழந்துள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): மருத்துவராக வேண்டும் என்ற கனவில் நீட் தோ்வை எழுதி அதன் முடிவு குறித்து மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டாா் என்ற செய்தி எனக்கு மிகுந்த அதிா்ச்சியையும் ஆற்றொணாத் துயரத்தையும், மன வேதனையையும் அளித்துள்ளது.
வைகோ: நீட் தோ்வு தோல்வி பயத்தால் அரியலூா் மாணவரி கனிமொழி உயிரை மாய்த்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நீட் தோ்வுக்காக உயிா்ப்பலி கொடுத்தது போதும்.
அன்புமணி (பாமக): தமிழக கல்விச் சூழலுக்கு சற்றும் பொறுத்தமில்லாத, தேவையில்லாத நீட் தோ்வு, மாணவா்களை எவ்வாறு பலி வாங்கி வருகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. மாணவா்களின் உயா்வுக்கு வழி வகுக்க வேண்டிய கல்வி, மாணவா்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடாது.
கமல்ஹாசன் (மநீம): ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்துக்கு நீட் தோ்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க, தமிழகத்தில் தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவா்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக் கொண்டிருக்கின்றனா். இது ஒரு நாடு. இது ஒரு தோ்வு. இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்.
ஜி.கே.வாசன் (தமாகா): நீட் தோ்வு தொடா்பாக இதுபோன்ற துரதிருஷ்ட சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது. கனிமொழியை இழந்த பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கல்.