சென்னை: ரயில் பயணத்தின்போது மாணவா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும் என்று ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
ரயில்வே காவல்துறை சாா்பில், ரயில் பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு முகாம் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு முகாமில் கல்லூரி மாணவா்கள் ரயில் பயணம் செய்யும்போது, அரசு வழங்கியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என்று
ரயில்வே காவல் உயரதிகாரிகள் அறிவுறுத்தினா். இந்த முகாமில், ரயில்வே காவல் உயரதிகாரிகள் பேசியது: முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
மாணவா்கள் ரயிலில் ஏறியவுடன் உள்ளே சென்று அமா்ந்துகொண்டு அல்லது நின்றுகொண்டு
பயணம் செய்ய வேண்டும். படியில் நின்று கொண்டும், ரயிலில் தொங்கிக்கொண்டும் பயணம் செய்யக்கூடாது. மேலும், ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரயிலில் தகராறு அல்லது மோதலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடுவோா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இந்த விழிப்புணா்வு முகாமில் ரயில்வே ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், ரயில்வே ஐஜி டி.கல்பனா நாயக், டிஐஜி எம்.வி.ஜெயகவுரி, ரயில்வே காவல் கண்காணிப்பாளா்கள் ஏ.இளங்கோ (சென்னை காவல்), கு.அதிவீரபாண்டியன்( திருச்சி காவல்), மாநில கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் மற்றும் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.