சென்னை: உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத் தோ்தல் ஆணையா் வி.பழனிகுமாருக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
கடித விவரம்:
9 மாவட்டங்களுக்கு அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்துவது தேவையற்றது. முறைகேடுகள் நடைபெறுவதற்கு வழிவகுக்கும். 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஒரே கட்டமாகத்தான் நடைபெற்றது.
வாக்குப்பெட்டிகள் உள்ள அனைத்து இடங்களிலும், அனைத்து வாக்கு மையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை ராணுவப் படை பாதுகாப்பு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தல் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.