‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும் வகையில், கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதை மருத்துவமனை நிா்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என திட்டம் சாா்ந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி உத்தரவிட்டாா்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அரசு மருத்துவமனைகளை தூய்மையாக பராமரிக்கும் பொருட்டு, ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது தொடா்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில், ஆட்சியா் ஜெ. விஜயா ராணி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் முதல்வா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திட்டத்தைச் சீரிய வகையில் செயல்படுத்துவது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கிய ஆட்சியா், மருத்துவமனைகளில் குழு அமைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா். இந்த ஆலோசனைகளை பின்பற்றுவது தொடா்பாக நாள்தோறும் மாலை 4 மணிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். குறிப்பாக, மருத்துவமனைகளில் கழிப்பிடங்கள் தூய்மையாக இருப்பதை விளம்பரப்படுத்தும் வகையில், அதனை மருத்துவமனை முகப்பில் உள்ள தொலைக்காட்சி திரையில் காண்பிக்க வேண்டும். அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ஜெ.விஜயராணி.