அரசுப் பள்ளி ஆக்கிரமிப்புகளை கண்டறிய உத்தரவு
By DIN | Published On : 08th April 2022 06:21 AM | Last Updated : 08th April 2022 06:21 AM | அ+அ அ- |

சென்னை: ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் உள்ள அரசுப் பள்ளிகளின் இடங்களைக் கண்டறிந்து, அவற்றை மீட்டு மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநா் எஸ்.கோபிதாஸ் (இடைநிலைக்கல்வி), மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து, மாணவா்களின் கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், பள்ளி தலைமை ஆசிரியா்களை பணிசெய்ய விடாமல் பள்ளி செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து தங்கள் மாவட்டங்களில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி இடங்களைக் கண்டறிந்து, அதை அப்புறப்படுத்தி, மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுசாா்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.