சென்னை: சென்னை அருகே மதுரவாயலில், ஏற்பட்ட தீ விபத்தில் முதிய தம்பதி காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரவாயல் தனலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (70). இவா் மனைவி தனலட்சுமி (66). இத் தம்பதிக்கு 4 மகன்கள் இருக்கின்றனா். தம்பதிகள் அங்கு தனியாக வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் தனலட்சுமி வியாழக்கிழமை காலை வெந்நீா் போடுவதற்காக சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது அந்த அடுப்பில் இருந்து ஏற்கெனவே சமையல் கசிவு ஏற்பட்டு, அந்த வீடு முழுவதும் வாயு கசிந்திருந்ததினால் பயங்கர சத்ததுடன் தீப்பிடித்து எரிந்தது.
இதில் தனலட்சுமியும், வீட்டில் இருந்த பாலசுப்பிரமணியும் தீயில் சிக்கிக் கொண்டனா். இருவரது அலறல் சத்தத்தையும் கேட்ட, திரண்டு வந்த அந்தப் பகுதி மக்கள் பாலசுப்பிரமணியையும், தனலட்சுமியையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.