சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக சில்லறை வணிக கடைகளை மூடும் அதிகாரிகள், ஆவின் நிறுவனத்தால் வழங்கப்படும் பால் மற்றும் பால் பொருள்களை ஏன் பிளாஸ்டிக் வடிவில் வழங்காமல் கண்ணாடி பொருள்களில் அடைத்து வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்யும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கில், இதனைத் தெரிவித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வருவதை தடுக்காதவரை, அவற்றை கடைகளில் இருந்து பறிமுதல் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என கருத்துத் தெரிவித்தனர்.